உத்தவ கீதை - சில கேள்விகளும் பதில்களும்
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள்புரிந்தவர், உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரே, இந்த அவதாரத்தில்பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவதுகேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்கநினைக்கிறேன் என்றார்.
இந்த உரையாடலில் உத்தவர் கேட்ட கேள்விகளும் அதற்கு யசோதை மைந்தனின் பதில்களும் உத்தவ கீதை எனப்படுகிறது.
மகாபாரதத்தில் ஏற்படும் சில அடிப்படை சந்தேகங்களை இது தீர்த்து வைக்கிறது என்பது இதன் சிறப்பு.
பெருமானே! நீ வாழச் சொன்ன வழிவேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன்நிறைவேற்றுவாயா? என்றார் உத்தவர்.
உத்தவரே! அன்று குருக்ஷத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, பகவத் கீதை. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், உத்தவ கீதை.
அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன்.தயங்காமல் கேளுங்கள் என்றான் பரந்தாமன்
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்;
கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்
உண்மையான நண்பன் யார்?
நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லாமலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன் என்றான் கண்ணன்.
இந்த பதிலை எதிர்ப்பார்த்துதான் உத்தவர் இந்த கேள்வியை முன் வைக்கிறார்.
உத்தவருக்கு கிருஷ்ணனின் மீது தீராத கோபம் இருந்திருக்க கூடும் ஆனாலும் பேசாமல் இருந்தார். சந்தர்ப்பம் கிடைத்தது கேட்க விடுவாரா?
முதல் கேள்வியே நண்பன் என்பவன் யார் என்று கேட்க அதற்கு கண்ணன் சொன்ன பதிலில் இருந்தே ஆரம்பிக்கிறார்.
நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லாமலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன் என்றாயே...
பின்பு ஏன் பாண்டவர்கள் சூதாட ஆரம்பித்த பொழுதே தடுக்கவோ காக்கவோ இல்லை? நீ மட்டும் மனது வைத்திருந்தால் இவ்வளவு பெரிய கொடூரமான போருக்கே தேவை இருந்திருக்காதே என்று உண்மையான சோகமும் அக்கறையும் கூட கொஞ்சம் கோபம் வைத்து கேட்டார்...
அது மட்டுமா?
எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?
என்று சாராமாரியாக யசோதை மைந்தனை கடிந்துக் கொள்கிறான்...
நியாயம் தானே?
உலகின் ஒவ்வொரு அசைவையும் அறிந்த ஹரியே இந்த தவறை செய்தான் எனில் யாருக்குதான் கோபம் வராது?
தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டைஇழந்தான்;
தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.
திரௌபதிஅதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு, இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால்விட்டான் துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச்சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.
மாறாக, திரவுபதியின் துகிலை உரித்து, அவளின்மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, துகில் தந்தேன். திரவுபதி மானம் காத்தேன் என்று மார்தட்டிக்கொண்டாய்.
மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைக் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில்,அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது?
என்று படபடவென கேள்விகளை தொடுக்கிறான்
வழக்கம் போல அமைதியே உருவான சாந்தமான குரலில் தனது பதிலை எடுத்துரைக்கிறான் யசோதை மைந்தன்.
உத்தவரே...
விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம்தருமனுக்கு இல்லை. அதனால் தான் தருமன் தோற்றான் என்றான் கண்ணன்.
கிருஷ்ணனின் பதிலுரை கேட்டு உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.
முதலிலேயே தர்மம் எது என்பதை சுருக்கமாக சொன்ன கிருஷ்ணன் இப்பொழுது கொஞ்சம் விரிவாக அதை எடுத்துரைக்கிறான்.
துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார் என்றான் துரியோதனன். அது
விவேகம்.
தருமனும் அது போலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான் என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள் நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக்காய்களில் போடத்தான் முடியுமா?
அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைகளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம்.
ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.
ஐயோ.... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது என்று எண்ணி என்னிடமே அதே கோரிக்கையை வைக்கிறான்.
கடவுளே! அவன் மட்டும்சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் வரமுடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரவுபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்துகொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!
நல்லவேளை... துச்சாதனன் துகிலுரித்தபோதும்
தனது பலத்தால்போராடாமல், ஹரி.... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம் எனக்குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக்காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன்.
அவள் மானத்தைக் காக்க வழிசெய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு? என்று பதிலளித்தான் கண்ணன்.
அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால் ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கிறேன் என்றார் உத்தவர். கேள் என்றான் கண்ணன்.
அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால் ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கிறேன் என்றார் உத்தவர். கேள் என்றான் கண்ணன்.
அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக,
நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா? புன்னகைத்தான் கண்ணன்.
உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படிஅமைகிறது.நான் அதை நடத்துவதும் இல்லை. அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் சாட்சி பூதம்.
நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம் என்றான்.
நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள்தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டேஇருக்க வேண்டும். அப்படித்தானே? என்றார் உத்தவர்.
உத்தவரே!
நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான்.
எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.



அற்புதம்
ReplyDeleteநல்ல விளக்கம்
ReplyDeleteநன்று
ReplyDelete